வடக்கில் மறைமுகமாகவும் துரித கதியிலும் தோன்றும் புதிய விகாரைகள்…!

0 comments
(ஆர்.வி.கே.)
நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற மைத்திரி ரணில் தலைமையிலான கூட்டு அரசாங்கத்தினாலும் தமிழர் தயாகப் பகுதிகளில் புதிதாக விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஏற்கனவே மகிந்த ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட விகாரைகளும் புதுப் பொலிவுடன் புனரமைக்கப்பட்டும் வருகின்றது.
அந்த வகையில் யாழ்ப்பாணத்தின் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்ததும் தற்போதும் உயர்பாதுகாப்பு வலயங்களாக இருக்கின்றதுமான பகுதிகளில் புதிய புதிய விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு வெளியில் பொது மக்கள் வாழ்கின்ற பகுதிகளிலும் இராணுவம் கடற்படையினர் நிலை கொண்டிருக்கின்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட விகாரைகளைப் புனரமைக்கின்ற நடவடிக்கைகள் மிகத் தீவிரமாகவும் அதேநேரம் மறைமுகமாகவும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
இதற்கமைய யாழ்ப்பாணத்தின் மாதகல் பகுதியில் அமைந்துள்ள சம்பில் துறைப்பிரதேசத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் பெருமளவிலனான தமிழ் மக்களின் நிலங்கள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் பெரியளவிலான விகாரையொன்று ஏற்கனவே அமைக்கப்பட்டு அந்த விகாரையை தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். அதனால் இந்த விகாரைக்கு புது வரைவிலக்கணமும் குறிப்பிடப்பட்டு அதாவது கடல்வழியாக அந்தப் பகுதிக்கு சங்கமித்தை வந்ததாகக் கூறி அது சிங்களப் பிரதேசமாக தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு கடற்படையாலும் அங்குள்ள பௌத்த பிக்குவாலும் சித்திரிக்கப்பட்டு வருகின்றது. 
இந் நிலையில் தற்போது அந்த விகாரை புனரமைப்பு வேலைகளும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இப் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். அதனை அண்மித்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலப்பரப்பில் கடற்படையினரால் மிகப் பிராமாண்டமான ஹோட்டலொன்றும் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தெற்கிலிருந்து யாழிற்கு சுற்றுலா என்ற பெயரில் வருகின்ற சிங்கள மக்களுக்கு இங்கு தான் கடற்படையினரதும் இராணுவத்தினரதும் மேலும் சிங்கள அரசியல்வாதிகளதும் உறவினர்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு புதிய வரலாறுகளும் கூறப்பட்டு வருகின்றது. மேலும் அந்த விகாரைக்குள்ளும் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட படங்களும் காண்பிக்கப்பட்டு புதிய வரலாறுகளைச் சித்தரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
விகாரை உள்ள பிரதேசத்தில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடவும் மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் மீனவ குடும்பங்களும் பாதிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












           virakesari இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.

Aucun commentaire:

Enregistrer un commentaire