மாதகல்.நெற் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல்/ தைத் திருநாள்/ தமிழ்ப் புத்தாண்டு 2052 (திருவள்ளுவர் ஆண்டு 2052) நல்வாழ்த்துக்கள் !!!
மலரும் இத் தமிழ்புத்தாண்டில், அன்பு பெருகி, சகல செல்வங்களும் நிலைக்க, வாழ்க்கையில் அனுபவித்த மனக் கவலைகள், கஷ்டங்கள் யாவும் நீங்கி இன்பம் பிறக்க வேண்டும். எம் அடையாளங்களைத் தொலைக்காமல், தமிழ் தமிழாக; தமிழர் தமிழராக; இத் தமிழ்ப் புத்தாண்டு நன்நாளில் உறுதி கொள்வோம் - உயர்வு பெறுவோம்!!!!
சூரியனின் உத்தராயண செல்கையே தைத்திருநாளாக, தைப்பிறப்பாக
கொள்ளப்படுகிறது. சூரியனுக்கும் இயற்கைக்கும் பூச்சி புழு உட்பட
அனைத்து உயிர்களுக்கும் நன்றி கூறுகின்ற தினமாக இருப்பதினால் சிவபெருமானின் நெற்றிக்கண் சூரியன் என்றுகூட கூறப்படுகின்ற ஐதீகமும் உண்டு. கடவுளர்களுக்கும் உயிர்களுக்கும் அறிவியல் தொடர்பான விளக்கத்தை எடுத்துக்காட்டி வாழ வைப்பதே சமயம். இந்த சமய வாழ்வு ஓர் ஒளி மூலமே ஆரம்பமாவதுடன் வாழ்வும் வளமும் பிரகாசமாகின்றது.
தை மாதப் பிறப்பன்று சூரியன் தனு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் தைப்பொங்கலை மகர சங்கிராந்தி என்று கூறுவர். பகலவன் தையிலிருந்து ஆனி மாதம் வரை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் காலத்தை உத்தராயனமென்றும் ஆடி முதல் மார்கழி வரை பயணிப்பதை தட்சிணாயனம் என்றும் கூறப்படுகிறது. மகரம் என்றால் சூரியன் என்று பொருள். பகலவன் அல்லது பரிதி தனு ராசியிலிருந்து மகர ராசியில் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் தொடங்குவதே மகர சங்கராந்தி என அழைக்கப்படுகிறது.






















































































































































































