
சிறுகுறிப்பு
மயில்வாகனப் புலவர் பற்றிய இந்தக் குறிப்பு யாழ்ப்பாண வைபவமாலையை பதிப்பத்தவர்களில் ஒருவராகிய குல. சபாநாதன் அவர்களால் யாழப்பாண வைபவமாலை பதிப்பில் எழுதப்பட்டதாகும்.மயில்வாகனப் புலவர், யாழ்ப்பாணம் பண்டைத்தரிப்புக் கோயிற்பற்றைச் சேர்ந்த மதகற்கிராமத்திற் பிறந்தவர். இவருடைய தந்தையார் பெயர் சுப்பிரமணயம் எனவும், தயார் பெயர் சிதம்பரம் எனவும் கூறுவர். கண்டியரசன் மீது கிள்ளைவிடு தூது பாடிய மாதகல் சிற்றம்பலப்புலவரின், சகோதரியார் புதல்வரே மயில்வாகனப் புலவர். இவர் இளமையிலே தம்மாமனாரிடம் கல்விகற்று சிறந்த பாண்டித்தியமடையலானார். இவர் வையா எனும் புலவர் மரபிலே உதித்தவர். அது
நெய்யார்ந்த வாட்கைப் பரராச சேகரன் பேர்நிறுவி
மெய்யாக நல்ல கலைத்தமிழ் நூல்கள் விரித்துரைத்த
வையாவின் கோத்திரத் தான்மயில் வாகனன் மாதவங்கள்
பொய்யாத வாய்மைப் புலியூரந்தாதி புகன்றனனே
என்னும் புலியூரந்தாதிச் சிறப்புப்பாயிரச் செய்யுளாலறியப்படுகின்றது. இச்செய்யுள் வரதபண்டிதர் பாடியதெனப்பொதுவாக நம்மப்படுகின்றது, வையா எனும் புலவர், சயவீரசிங்கையாரியன் எனப்படும் ஐந்தாம் செகராசசேகரன் காலத்தில் (கி.பி 1380-1414) சமஸ்தானப் புலவராய் கீர்த்தியுடன் விளங்கினார். இவர் வையாபாடல், பரராசசேகன் உலா, பரராசசேகரன் இராச முறை என்னும் நூல்களின் ஆசிரியர்.
மயில்வாகனப் புலவருடைய வரலாறு திரு. அ. சதாசிவப்பிள்ளையவர்கள் எழுதிய “பாவலர் சரித்திர தீபகம்” எனும் நூலிலும், திரு. அ. குமாரசாமிப்புலவர் அவர்கள் எழுதிய ‘தமிழ்ப்புலவர் சரித்திரம்’ எனும் நூலிலும், வயாவிளான் திரு. க. வேலுப்பிள்ளையவர்கள் வெளியிட்ட ‘யாழ்ப்பாண வைபவ கௌமுதி’யிலும், வித்துவான் பிரம்மசிறீ சி. கணேசையர் அவர்கள் எழுதிய ‘ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரம் எனும் நூலிலும் சுருக்கமாக கூறப்பட்டுள்ளது,
யாழ்ப்பாணம், வண்ணை வைத்தீஸ்வரசுவாமி கோயிலைக் கிபி 1787 இல் கட்ட ஆரம்பித்து 1791 இல் திருப்பணியை முடித்து கும்பாபிடேகம் செய்வித்த தர்மப்பிரபுவாகிய வைண்ணை வைத்திலிங்கச் செட்டியாரும், மயில்வாகனப்புலவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். இவ்விருவரும், இந்தியாவினின்று யாழ்ப்பாணத்தில் வந்திருந்த கூழங்கைத்தம்பிரானிடம் ஒருங்கு கற்றனர். கூழங்கைத்தம்பிரான் ஒரு பாடத்தை ஒரே முறையன்றி இரண்டாம்முறை சொல்லிக்கொடாரென்றும், வைத்திலிங்கச்செட்டியர் ஒரே முறையிற் கிரகிக்கத்தக்கவரல்லரென்றும், மயில்வாகனப் புலவர் ஒரே முறையிற் கிரகிக்கத்தக்க, சிறந்த ஞாபகசகத்தியுடையவரென்றும், அதனால் தம்பிரான் சொல்லிக்கொடுக்கும் பாடத்தை மயில்வாகனப்புலவர் ஒரேமுறையிற் கிரகித்து வைத்திலிங்கச்செட்டியாருக்கு மீளச்சொல்லிக்கொடுப்பாரென்றும் சரித்திராசிரியர் சிலர் கூறுவர். இதனால், மயில்வாகனப்புலவர் சிறந்த ஞாபகசகத்தியுடையவர் என்பது புலனாகின்றது.
மயில்வாகனப் புலவர் காலம்
கல்வளையந்தாதி, மறைசையந்தாதி, பறாளை விநாயகர் பள்ளு, கரவை வேலன் கோவை முதலிய நூல்களை இயற்றிய நல்லூர் சின்னத்தம்பிப் புலவரும், சிவராத்திரி புராணம், ஏகாதசிப் புராணம், கிள்ளைவிடு தூது, அமுதாகரம், பிள்ளையார் கதை ஆகிய நூல்களை இயற்றிய வரதபண்டிதரும், மயில்வாகனப்புலவரும் ஒரே காலத்தினர் எனச் சரித்திராசிரியர் சிலர் கருதுகின்றனர். மயில்வாகனப்புலவர் இயற்றிய யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூலின் சிறப்புப்பாயிரச் செய்யுளில், மேக்கறூண் எனும் ஒல்லாந்து தேச மன்னன் பெயர் குறிப்பிடப்படுதலால், அது கிபி 1736ல் கொம்மந்தோராயிருந்த இயன் மக்காராவையே குறிக்குமெனக் கருதி, இப்புலவர் காலமும் 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியாகுமென யாழ்ப்பாணச் சரித்திர ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டார்கள். காலஞ்சென்ற பிறக்ரர் திரு. வ. குமாரசுவாமி அவர்கள் ஆங்கில இந்து சாதனப் பத்திரிகையில், 1934ம் ஆண்டில் எழுதிய கட்டுரையில் இக்கொள்கையை விரிவாக விளக்கிக் காட்டியுள்ளார்கள்.
மயில்வாகனப் புலவர் அவர்களின் பிற்காலச் சீவியத்தையும் அவரது காலத்தையும் கரவை வேலன் கோவை பதிப்பித்த பிரம்மசிறீ தி. சதாசிவஐயர் அவர்கள் அரிதில் முயன்று ஆராய்ந்து, அப்பதிப்பில் வெளியிட்டிருக்கின்றார்கள். அதனை ஈண்டெடுத்துக் காட்டுதல் பொருத்தமுடையதாகும் என நம்புகின்றோம்.
கிபி 1805 ஆம் ஆண்டில் வைத்திலிங்கச் செட்டியார் தம் ஆஸ்திகளைப்பற்றி மரணசாதனப்பத்திரம் பிறப்பித்தார் என்பது அப்பத்திர வாயிலாகவே இன்றும் நாமறியக்கிடக்கின்றது. அங்ஙனம் பத்திரம் பிறப்பித்த பின்னர், செட்டியார் பெரும்பொருள் எடுத்துக்கொண்டு, வேண்டிய பரிசனங்களுடன் தம் தோழராகிய மயில்வாகனப்புலவரையும் அழைத்துக்கொண்டு காசிக்கு பிரயாணமானார். வழியிலும் காசிப்பதியிலும், பல தரும தாபனங்கள் செய்து, அங்கு சிறிது காலத்திற் செட்டியர் கால கதியடைய, மயில்வாகனப்புலவர் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து, மேலும் சிலகாலம் வாழ்ந்திருந்தனர். அப்போது அவரால் எழுதப்பட்ட கந்தபுராண ஓலைச்சுவடி ஒன்று இப்பொழுதும் மாதகலில் அவர் வழித்தோன்றலாகிய ஒருவரிடம் இருக்கின்றது. அவ்வேட்டின் இறுதியில் முந்தின கையெழுத்திலேயே,
ஈசன் மைந்தன் புராண மெழுதினோன்
தேசு லாவு திருவளர் மாதையூர்
மாசி லாமணி மாமகன் மைந்தனாம்
காசி காண்மயில் வாகன யோகனே
எனும் செய்யுள் எழுதப்பட்டிருக்கின்றது. இச்செய்யுளால் மயில்வாகனப் புலவர் காசிக்குச் சென்று மீண்ட சம்பவம் நன்கு தாபிக்கப்படுகின்றது, 1814ம் ஆண்டில் மாதகற் பகுதியல் பெருவெள்ளம் ஒன்று நிகழ்ந்ததென்றும், அவ்வெள்ளத்தையும் அதனால் நிகழ்ந்த சேதத்தையுங்குறித்து ஓர் அம்மானை மயில்வாகனப் புலவராற் பாடப்பட்டதென்றும் அவர் வழித்தோன்றலாயுள்ளோர் கூறக்கேட்டலின், மயில்வாகனப் புலவர் கிபி 1814ம் ஆண்டில் வாழ்ந்திருந்தாகல் வேண்டும். ஆகவே, அவர் செய்த ‘யாழ்ப்பாண வைபவமாலை’ என்னுஞ் சரித்திர நூல் கிபி 1736ம் ஆண்டில் இயற்றப்பட்டதென்னுங் கொள்கை எவ்வாறு பொருந்தும் என்பது அறிஞர்கள் ஆராயத்தக்கது. 1736இல் மயில்வாகனப் புலவரும், சின்னத்தம்பிப் புலவரும், பத்து வயதுக்குட்பட்ட சின்னஞ் சிறுவர்களாகவே இருந்திருப்பார்கள். இவ்வறிஞருடைய கொள்கைப்படி மயில்வாகனப்புலவர் காலம் 18ம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியென கருத இடமுண்டு. மயில்வாகனப் புலவர் வண்ணை வைத்திலிங்கச்செட்டியார் காலத்தில் வாழ்ந்தவராதலின், இப்புலவர் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இருந்திருக்க வேண்டும் என முதலியார் இராசநாயகம் அவர்கள் கருதி அவ்விடயம் பற்றி ஆங்கில இந்து சாதனப் பத்திரிகையில் (29-10-34) ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டார்கள். சதாசிவ ஐயர் அவர்கள் கொள்கையும் இதற்கு ஆதரவளிக்கின்றது. அதனை மேலே காட்டியுள்ளோம். ‘தமிழ்ப்புலவர் சரித்திரம்’ என்னும் நூலினை 1916ம் ஆண்டில் வெளியிட்ட சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் அவர்களும், “காலம் ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன் என்பர்’ எனக் கூறியிருத்தலும் இக்கொள்கைக்கு ஆதரவளிக்கின்றது. இன்னும் ‘யாழ்ப்பாண வைபவ கௌமுதி’ என்னும் நூலில், இப்புலவர் காலத்தை விபரிக்குமிடத்து, ‘மயில்வாகனப் புலவர் வைபவ மாலையை இயற்றிய காலம், 1736 வரையிலென மெஸ். விருத்துரை (Britto) கூறிப்போந்தார். ஆயின் வைத்திலிங்கச்செட்டியாரோடு அவரைக் கூழங்கைத்தம்பிரானிடம் பாடங்கேட்டவராகச் சொல்லும் ஐதீகத்தின்படி அந்நூலியற்றிய காலம் இன்னும் ஐம்பது வருடம் வரையிலென்றாலும் பிற்பட்டதேயாகவேண்டும்.” எனக்கூறப்பட்டிருத்தலும் ஈண்டு ஒப்பிட்டு நோக்கற்பாற்று. ஆயின், அரசாங்க சாசன பாதுகாப்பு நிலையத்திலுள்ள (Archives) டச்சு காலத்துப் பத்திரங்களில் 1706-ஆம் ஆண்டில் பீற்றர் மக்காரா என்பவர் பிசுக்கால் அதிகாரியாக யாழ்ப்பாணத்தில் இருந்தார். (Pieter Macare – Independent Fiscal of the Jaffna Pattam in 1706) என்னுங் குறிப்புக் காணப்படுதலால், இவருடைய கேள்விப்படியே மயில்வாகனப்புலவர் 1706ல் வைபவமாலையை இயற்றினார் எனத் திரு. வ. குமாரசுவாமியவர்கள் இந்து சாதனப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையொன்றிற் குறிப்பிட்டுள்ளார் (A Peep into Dutch Archives in Ceylon by V. Coomaraswamy B.A – Hindu Organ of 3-2-1936). காலியில் கொம்மாந்தராயிருந்த இயன் மாக்காரா யாழ்ப்பாணத்துச் சரித்திரத்தில் நாட்டமுடையவராய் இருந்தார் என்பது பொருத்தமற்ற கூற்று என்பதைப் பிள்ளையவர்கள் ஒத்துக்கொண்டு, மயில்வாகனப் புலவர் வைபவமாலையை இயற்றிய காலம் 1706ம் ஆண்டென்றெ கொள்கின்றார். ஆனால், பிசுக்கால் அதிகாரியாயிருந்த ஒருவனை உலாந்தேசு மன்னன் என மயில்வாகன்ப் புலவர் குறிப்பிட்டிருப்பாரோ என்பது ஐயத்துக்கிடமானது. எனினும் அவ்வதிகாரியையே உலாந்தேசு மன்னன் எனப் புனைந்துரையாகப் பாடியிருத்தல் கூடுமெனக்கொள்ளலாம். அங்ஙனமாயின், மயில்வாகனப்புலவர் காலம் 18ம் நூற்றாண்டின் முற்பகுதியென கொள்ள வேண்டும்.
எனவே, மயில்வாகனப் புலவர் காலம் 18ம் நூற்றாண்டின் முற்பகுதியெனக்கொள்ளுவார் ஒரு சாரார். 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியும் எனக்கொள்வர் பிறிதொரு சாரார். சிறப்புப்பாயிரத்திற் கூறப்பட்டுள்ள, மேக்கறூன் என்பவர் யார் என்பதைத் திட்டமாக அறிந்து கொள்ளும் வரை, மயில்வாகனப்புலவர் காலத்தையும் திட்டமாகக் கூறல் கஷ்டமானது. எனினும், வண்ணை வைத்திலிங்கச்செட்டியாரும் மயில்வாகனப்புலவரும் கூழங்கைத்தம்பிரானிடம் பாடங்கேட்டதாக கூறப்பட்டாலும், செட்டியாருடன் காசியாத்திரை செய்த மயில்வாகனப்புலவர் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து மேலும் சிலகாலம் வாழ்ந்திருந்தனர் என திரு. தி. சதாசிவஐயர் அவர்கள் தக்க சான்றுடன் நிறுவியிருத்தலாலும், மயில்வாகனப்புலவர் காலம் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியும் எனக்கொள்வதே சாலப்பொருத்தமுடையது.
thejaffna.com
மயில்வாகனப் புலவர், மாதகல்
1779 – 1816
கூழங்கைத் தம்பிரானிடத்துத் தமிழ் இலக்கண இலக்கியங்களும் சித்தாந்த சாத்திரங்களும் கற்றவர்கள் அனேகர். அவர்களுள்ளே மாதகல் மயில்வாகனப் புலவரும் இருபாலை நெல்லைநாதரும் சிறந்தோர். இம்மயில்வாகனப் புலவருடைய புலமைக்கும் வாக்கு வன்மைக்கும் நிகர் கூறுவதெளிதன்று. அவர் சுன்னாகத்து அந்தணர் திலகரும் கவீந்திரருமாகிய வரதராசபண்டிதர் செய்த சிவராத்திரி புராணத்துக்குச் சொன்ன,
“பரத ராசனுய ரசல ராசனுமை
பங்க நண்புதரு பண்புசேர்
விரத ராசசிவ நிசியி நீள்சரித
மிகவிளங் கிடவி ளம்பினான்
கரத ராச¨னெயு மொழிய ரங்கனருள்
கருணை மாரிநிகர் பரிணிதன்
வரத ராசன்மறை வாண ராசனியல்
மதுர வாசகவி ராசனே.”
என்னும் பாயிரம் அவர் வன்மையை நன்கு விளக்கும்.
அந்தாதி – புலியூர் யமக அந்தாதி
மாலை – யாழ்ப்பாண வைபவ மாலை
நன்றி – kanaga_sritharan.tripod.com, ourjaffna.com இணையம்
22. காசியாத்திரை விளக்கம்
கி.பி. 18ஆம் நூற்றாண்டில், யாழ்ப்பாணத்து மாதகல் என்னும் ஊரில் இருந்த மயில்வாகனப் புலவர் இயற்றியது இந்நூல். மயில்வாகனப் புலவர், கூழங்கைத் தம்பிரானிடம் கல்வி பயின்றவர். இவர் இயற்றிய காசியாத்திரை விளக்கமும் ஞானாலங்கார நாடகமும் மறைந்துவிட்டன.
இற்றைக்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் (நிகழ் சகாப்தம் 1310இல்) சிங்கள பௌத்த மன்னன் ஒருவன் கேட்டுக்கொண்டதன்பேரில் வைணவப்பிராமணர் ஒருவர் சரசோதிமாலை என்னும் பெயர்கொண்ட சோதிடநூல் ஒன்றை முதன்முதலாகத் தமிழில் எழுதினார். இந்தநூல் எழுதப்பட்டு 200 ஆண்டுகளுக்குப்பின் யாழ்ப்பாணத்தில் எழுதப்பட்ட தமிழ்நூல்களும் வைத்தியம் சோதிடம் பற்றியதாகவே இருந்தன.
ஒருசில வரலாற்றுத் தகவல்களைத்தரும் நூல்களாக கோணேசர் கல்வெட்டு, வையாபாடல், கைலாயமாலை, கைலாசபுராணம் என்பவை இன்று எமக்குக் கிடைக்கக்கூடியனவாக உள்ளன. இவையும் 400 அல்லது 500 வருடங்களுக்குள் எழுதப்பட்டனவாகவே உள்ளன. இவற்றுக்கும் பல ஆண்டுகள் கழித்தே வரலாற்று நூல்கள் என்ற அங்கீகாரத்தைப் பெறக்கூடிய யாழ்ப்பாண வைபவமாலை, மட்டக்களப்பு மான்மியம் என்னும் நூல்கள் தோன்றின. இவ்விரண்டு நூல்களும் முறையே யாழ்ப்பாணம் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் வாழும் தமிழ்மக்களின் வரலாற்றைப் பிரதானமாக எடுத்தாண்டுள்ளன.
யாழ்ப்பாணவைபவமாலை, மட்டக்களப்பு மான்மியம் ஆகிய இருநூல்களுமே ஒல்லாந்தர் இலங்கையின் கரையோரப்பகுதிகளை ஆட்சிசெய்த1736 ஆம் ஆண்டுக்கும் 1796 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தோன்றியனவாகக் காணப்படுகின்றன.
ஒல்லாந்து அதிகாரி ஜான் மக்கரே (Jan Macare) கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தாம் யாழ்ப்பாண வைபவமாலையை எழுதியதாக மயில்வாகனப்புலவர் கூறுகின்றார்.
ஒண்ணலங் கொண்மேக்கெறூ உனென்றோது
பெயர்பெற்ற விறல் உலாந்து தேசண்ணல்
பண்ணலங்கொள் யாழ்ப்பாணப் பதிவரலாறு
உரைத்தமிழால் பரிந்துகேட்கத்
திண்ணிலங்கு வேற்படைக் கைச் செகராச
சேகரன் றொல் அவையில் சேர்ந்தோன்
மண்ணிலங்கு கீர்த்தி வையாமரபின் மயில்
வாகனவேள் வகுத்திட்டானே.
1732 ஆம் ஆண்டில் ஒல்லாந்தரின் கைவசம் இருந்த காலியில் கமாண்டராக இருந்த ஜான் மக்கரே என்பார் 1736 ஜூன் ஏழாம் தியதி முதல் 1736 ஜூலை வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் தற்காலிக ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். இந்தக் குறுகிய கால இடைவெளியிலே யாழ்ப்பாணச் சரித்திரத்தை எழுதும்படி ஜான் மக்கரே மாதகல் மயில்வாகனப்புலவரைக் கேட்டிருக்கமுடியும்.
யாழ்ப்பாணத்தை டச்சுக்காரர் ஆட்சிசெய்தகாலத்தில் இடம்பெற்ற சம்பவங்களாக மயில்வாகனப்புலவர் குறிப்பிடும் வரலாற்றுச்செய்திகள் நம்பகத்தன்மை கூடியனவாக உள்ளன. ஒல்லாந்தர் காலத்தில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வுகளை யாழ்ப்பாணத்து வாக்கிய பஞ்சாங்கமுறைப்படி நின்ற சக ஆண்டு குறிப்பிட்டு மிகச் சரியாகவே மயில்வாகனப்புலவர் தந்துள்ளார். உதாரணமாக நின்ற சக ஆண்டு 1581 விளம்பிவருடம் (1658 C.E.) ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் கோட்டையைப் போர்த்துக்கேயரிடம் இருந்து கைப்பற்றியதை மயில்வாகனப்புலவர் பதிவு செய்திருப்பதைக் காணமுடியும். எனினும் இதற்கு முந்தைய வரலாற்று நிகழ்வுகளின் கால ஒழுங்கைக் குறிப்பிடுவதில் இவர் போதுமான அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பது வரலாற்று ஆசிரியர்கள் பலரும் ஏற்றுக்கொண்ட உண்மையாகும்.
மயில்வாகனப்புலவர் யாழ்ப்பாணவரலாற்றை எழுதும்படி தம்மை ஊக்குவித்தவர் ஓர் ஒல்லாந்து அதிகாரி என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளார்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மயில்வாகனப் புலவர் யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆட்சி செய்த காலத்தில் வாழ்ந்தவர். அக்காலத்தில் இருந்த ஒல்லாந்த அதிகாரியொருவரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாண வைபவமாலை என்னும் யாழ்ப்பாணச் சரித்திர நூலை இவர் இயற்றியதாகத் தெரிகிறது.
வரலாறு
இவர் யாழ்ப்பாணத்திலுள்ள மாதகல் என்னும் ஊரைச் சேந்தவர். வைபவமாலையின் சிறப்புப் பாயிரச் செய்யுளில் வரும்,
- "...மண்ணிலங்கு சீர்த்திவையா மரபில்மயில்
- வாகனவேள் வகுத்திட்டானே"
என வரும் அடிகளையும், இவரியற்றிய இன்னொரு நூலான புலியூரந்தாதி சிறப்புப் பாயிரச் செய்யுளில் வரும்,
- "...நல்ல கலைத்தமிழ் நூல்கள் விரிந்துரைத்த
- வையாவின் கோத்திரத் தான்மயில் வாகனன்..."
என்னும் அடிகளையும் ஆதாரமாகக் கொண்டு இவர், யாழ்ப்பாண அரசர்களான ஆரியச் சக்கரவர்த்திகளின் இறுதிக்காலப் பகுதியில் வாழ்ந்து வையாபாடல் எனும் யாழ்ப்பாணச் சரித்திரம் கூறும் நூலொன்றை எழுதிய வையா அல்லது வையாபுரி ஐயர் என்பவரது பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இவர் வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலைக் கட்டுவித்த வைத்திலிங்கம் செட்டியாரின் நண்பராயிருந்தார் என்பதை வைத்து, இவரது காலம் 18 ஆம் நூற்றாண்டின் பின்னரையாக இருக்கக்கூடுமென நம்பப்படுகின்றது. "வைத்திலிங்கச் செட்டியார் கூழங்கைத் தம்பிரானிடம் பாடங்கேட்டது, மயில்வாகனப்புலவரை நடுவராக வைத்துக்கொண்டேயாம்."[1]
குறிப்புகள்
- ↑ முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ., யாழ்ப்பாணச் சரித்திரம், 1912, யாழ்ப்பாணம்: நாவலர் அச்சகம் (நான்காம் பதிப்பு, 2000, சென்னை: Maazaru DTP)
- மாதகல் மயில்வாகனப்புலவர் (இவர் எனது தந்தையின் தாயாரின் பேரன் முறையினர்)
- மாதகல் சிற்றம்பலப் புலவர் (இவர் மயில்வாகனப்புலவரின் மாமனார்) ஆவர்,
- இலங்கை வரலாற்றை முதலில் பாடலாக "இலங்கை மண்டலத்தோர் காதை" எழுதிய வையாநாதர் (ததீஷி மகரிஷி கோத்திரம்)
- எமது தாய், தந்தை இருவரும் ஆயுர்வேத மருத்துவர்கள். தாய் பட்டம் பெற்ற மருத்துவர், தந்தை தமிழ் கலாநிதி பட்டம் பெற்றவர், யாப்பிலக்கணப்படி செய்யுள் புனைவதில் வல்லவர்.
- தந்தையின் தந்தையார் ஆயுள்வேத வைத்திய சபையின் பதிவு பெற்ற வைத்தியர். பரம்பரையாகவும், வேதாரண்யம் சோமஸ்கந்த குருக்களிடமும் குரு சீட முறைப்படி மருத்துவம் கற்றிருக்கிறார். சுதந்திரத்திற்கு முந்திய இந்தியாவில் வேதாரண்யத்தில் பல்லாண்டு காலம் தங்கி மருத்துவம் கற்றுள்ளார். அவரின் தந்தையார், மாமனார் என்போரும் பாண்டித்தியம் பெற்ற வைத்தியர்கள்.
- எமது பேரனாரின் பேரன் அகத்திய மகரிஷி வழிவந்த மௌனகுரு என்ற சித்தரிடம் வைத்தியம், ஜோதிடம், வாதம், மாந்திரீகம் கற்றார்.
- யாழ்ப்பாணத்தில் பிரபலமான உடைவு முறிவு வைத்தியராக இருந்த நாயன்மார்கட்டு வைத்திய கலாநிதி. திரு. ஏ. உமாகாந்தன் அவர்கள் அவர்கள் தந்தையாரின் ஒன்றுவிட்ட அண்ணனும், எனது பெரிய தகப்பானாரும் ஆவார்.
- இப்படி முன்னோர்கள் அனைவரும் வைத்தியர்களாக இருந்ததால் மட்டும் நானும் வைத்தியராக முடியாது என்பதால் கடந்த பதினாறு வருடங்களாக எனது தாயாரிடம் சித்த ஆயுள்வேத வைத்திய அடிப்படைகளையும், நோய் நிதான, சிகிச்சை அனுபவங்களையும், கற்று, எனது குருநாதரின் ஆசியுடன் ஒரு முமுமையான வைத்தியராக இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரீட்சையில் சித்தியடைந்து, ஒரு அரச அங்கீகாரம் பெற்ற வைத்தியராக தற்போது பதிவு பெற்றுள்ளேன்.
- இந்த சந்தர்ப்பத்தில் ஒருவனிற்கு குருவின் கிருபையும், ஆசீர்வாதமும் இருப்பின் வாழ்வில் அனைத்தும் சித்திக்கும் என்பதனை அனுபவப்பூர்வமாக உணர்கின்றேன். ஏனெனனில் சித்த மருத்துவத்தினை பட்டப்படிப்பாக தேர்வு செய்து மிக்க ஆர்வத்துடன் கற்க சென்ற வேளையில் குருநாதர் இதை பட்டப்படிப்பாக படிக்க வேண்டாம், ஏற்கனவே இரத்தத்தில் உள்ளது, கல்லாமல் பாதி குலவித்தை, ஆகவே பல்கலைக்கழக அனுமதி கிடைத்த சூழலியல் விஞ்ஞானத்தினை கற்கும்படி உறுதியாக கூறிவிட்டார். அப்போது கவலை வேண்டாம் நீ ஒரு பரிபூரண மருத்துவராக வருவாய், குருநாதர் சரியான பாதையில் நடத்துவார் என ஆறுதல் கூறினார். அவரது உத்தரவினை ஏற்றுக்கொண்டு சித்த மருத்துவ பட்ட படிப்பினை கைவிட வேண்டியதாயிற்று, ஆனாலும் வீட்டில் இருந்த தாயாரின், பாட்டனாரின், வைத்திய நூற்களை கடந்த பல வருடங்களாக அனுபவத்துடன் கற்றதன் பலன் வைத்திய சபையின் இறுதிப்பரீட்சை தோற்றி அரச பதிவு பெற்ற வைத்தியராக தகுதி பெற முடிந்தது. பன்னிரண்டு வருடங்கள் கழித்து அவரது வாக்கு பலித்ததை நினைவு கூர்கிறேன்.
- எனது கல்வித்தகுதிகள் B.Sc (Spl) in Environmental Science, M.Sc in Environmental Science, Registered Ayurvedic physician at Sri Lanka Ayurveda medical council.
- ஆக குருநாதரின் ஆசியுடன் இன்று நவீன விஞ்ஞான அறிவு, யோக சாத்திர அறிவு, சித்த ஆயுர்வேத அடிப்படை என்பவற்றை ஓரளவு (!!!) அறிந்த ஒருவனாக இந்த துறையில் காலடி எடுத்து வைக்கின்றேன்.
- சித்த ஆயுள்வேத வைத்திய துறை சார் எனது அறிவினை பகிர்ந்து துறை சார் விழிப்புணர்வினை ஏற்படுத்துவது.
- சித்த ஆயுள்வேத வைத்திய ஆய்வுகளின் தகவல்களை பகிர்தல் .
- பண்டைய விஞ்ஞான மெய்ஞான கோட்பாடுகளை பகிர்தல்
- நிச்சயமாக எதுவித வைத்திய ஆலோசனைகளும் இணையத்தளத்தின் உடாக வழங்கப்பட மாட்டாது.
- சுய சிகிச்சையாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று பகிரப்படும் மருத்துவ தகவல்களை தகுந்த வைத்தியரின் ஆலோசனை இன்றி தாமாக முயன்று பார்க்க கூடாது, அத்தகைய தகவல்கள் அறிவுப்பகிர்விற்கு மாத்திரமே